சக்கரகட்டி !

Saturday, July 12, 2008

வேற யாரு நாந்தான் சக்கரகட்டி...

ஆமா!, இன்னிக்கு காலையிலதான் டிக்ளெர் பண்ணினாங்க, புலிவருது புலிவருது கதையா..வரும், வந்துரும், வந்துட்டே இருக்கும்னு சொன்னதெல்லாம் பலிச்சி நான் இன்னிக்கு சக்கரகட்டியாய்ட்டேன்.

இன்னும் புரியலயா...எனக்கு சுகர் வந்துருச்சுப்பேய்!

கடந்த வாரத்தில் வழக்கமான இடைவெளிகளில் செய்யும் ரத்த பரிசோதனையின் போது வெறும் வயிற்றில் இரத்தத்தில் சக்கரையின் அளவு 120க்குள் இருக்க வேண்டுமாம். நமக்கு 144, அட்ரா சக்க..அட்ராசக்கன்னு...இன்னிக்கு காலையில மொத நாள் ஸ்கூலுக்கு போற எல்கேஜி பயலை இழுத்துட்டு போற மாதிரி அன்ணாநகர் ல இருக்கற Dr.Mohans Diabetes Specialities centre க்கு வூட்டுக்காரம்மா தள்ளீட்டு போனாங்க .

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து இந்த மையத்துக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கேன்...பேஷண்ட்டா இல்லை அட்டெண்டரா......ஏன்னா...என்னோட அப்பா, அம்மா ரெண்டுபேருமே வெல்லக்கட்டிகள்..ஹி..ஹி.இன்னிக்கு நம்மளை பேஷண்ட்டா ஆக்கீட்டாய்ங்க.

காலையில ஏழுமணிக்கு உள்ள நுழைஞ்ச நான் வெளியவரும் போது மாலை 5.15. ஆஹா, அப்படி என்ன டெஸ்ட் பண்ணாய்ங்கன்னு ரோசனை வருமே...ஒரு எழவும் இல்லை. காலையில 10.20 கெல்லாம் எல்லா டெஸ்ட்டும் முடிச்சிட்டேன். ரிப்போர்ட் ரெடியாகவும், டாக்டரை பார்க்கவும்தான் அம்புட்டு நேரம் வெய்ட் பண்ணினேன். கடுப்பான கடுப்பு...எவனை பார்த்தாலும் எகிற வேண்டும் போல இருந்தது.அத்தனை சிறப்பான சேவை. அரசு மருத்துவமனை கெட்டது...அத்தனை சாவகாசமாய் மருத்துவமனை ஊழியர்கள்.ஆனால் விவரமாய் 3600 ரூபாயை ஆரம்பத்திலேயே பிடுங்கிவிட்டார்கள்.

இநத் லட்சணத்தில் டயட்டீஷியன் வேற சமீபத்துல உங்க மன நிலையில ஏதாவது மாற்றம் இருக்கறதா நினைக்கறீங்களான்னு கேட்டு வெறுப்பேத்தினா....என்னதான் செய்வேன்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா...னு வடிவேலு மாதிரி கண்ணை கட்டிக்கிட்டு வந்திருச்சு.வெறுப்புல எதையாவது சொல்லப்போய் அதுக்கு நாலு டெஸ்ட் எடுடான்ன்னு இம்சையாக்கிருவாய்ங்களோன்னு பல்லை கடிச்சிட்டு உக்காந்திருந்தேன்.

செம கூட்டம்...ஒரே ஒரு டாக்டர்தான் அம்புட்டு பேஷண்ட்டையும் பார்த்து ஆப்பு வைக்கனும்...பாவம் அவரும் எத்தனை பேரை சமாளிப்பார். என்னைத்தவிர அம்புட்டு பேரும் வயசானவய்ங்க...ஆஹா இந்த க்ளப்ல கொண்டு வந்து நம்மள சேத்துட்டாய்ங்களேன்னு வேற கவலையா வந்திருச்சு.

ஒரு வழியா டாக்டரை பார்த்தப்ப....இப்பத்தான் பார்டர க்ராஸ் பண்ணீருக்கீங்க, கவலைப்பட ஏதுமில்லை,ஆனா உங்களுக்கு சக்கரை வந்திருச்சி. இனி டயட்டெல்லாம் கரெக்ட்டா இருக்கனும். இரண்டுவாரம் மாத்திரை சாப்டுட்டு வாங்க...அப்பாலிக்கா மாத்திரைய நிறுத்தீட்டு டயட்ல மெய்ண்டெய்ன் பண்ணீரலாம்னு சொல்லி நெஞ்சுல பால்வார்த்தார் மவராசன்.

ச்சே...இம்புட்டு நாளும் மனசளவுள இனிமையா இருந்த நாம...இப்ப உடம்பாலும் இனியவனாய்ட்டோமேன்னு ஒரே ஃபீலிங்காய்டுச்சி...ஹி..ஹி...(வெளம்பரம்..வெளம்பரம்!)

சரி இந்த நல்ல செய்திய நாலு பேர்ட்ட சொல்லுவோமேன்னு கூப்டா...அவனவன் டன் கணக்குல அட்வைஸ் பண்றானுங்க...ஏண்டா சொன்னோம்னு ஆய்ருச்சி...இதுவும் வேணுமடா...எனக்கு இன்னமும் வேணுமடான்னு பாடிட்டே இதை தட்டிட்டு இருக்கேன்...

இப்ப கொஞ்சம் சீரியஸ் மேட்டர்...

சர்க்கரை வியாதி என்பது குறைபாடேயொழிய நோயாக கருதமுடியாது.

சரியான உணவுப்பழக்கமும், தொடர்ச்சியான உடற்பயிற்சியும் இருந்தால் தாராளமாய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்தியர்கள்தான் உலக அளவில் இந்த குறைபாட்டுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

சர்க்கரை வியாதியென்பது வம்சாவழியாய் தொடர அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றன.

சரியான மருத்துவ ஆலோசனை பெறாமலோ அல்லது முறையான விழிப்புணர்வு இல்லாது போனால் இந்த குறைபாடு மற்ற உறுப்புகளின் செயல்பாட்டினை பாதித்து அதனை செயலிழக்கச் செய்யும் அபாயம் இருக்கிறது.

எனவே 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இரத்தப் பரிசோதனை செய்து சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவினை கண்காணிப்பில் வைத்திருப்பது நல்லது.

ஊதற சங்கை ஊதீட்டேன்....உடம்ப பார்த்துக்கங்கப்பா....

1 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யட்சன் அப்ப சித்தர்கதையும் புத்தர்கதையும் எழுதமாட்டீங்களா?