தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்....

Thursday, August 28, 2008

இன்று மாலை லக்கிலூக்கின் பதிவில் பதிவர் அனுராதா அவர்களின் பிரிவு பற்றி அறிந்த கணத்திலிருந்து உறுத்திக் கொண்டிருந்த ஒன்றினையே தமிழ்மண நிர்வாகத்திற்கு வேண்டுகோளாய் இந்த பதிவின் மூலமாய் வைக்கிறேன்.

சக பதிவர்களின் அங்கீகரிப்புகளையும், வெற்றிகளையும் தன் முதல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு அதனை தன் பயணச்சுவட்டில் பதிந்து வைக்கும் தமிழ்மணம், தளரா நெஞ்சுறுதியுடன் காலனை எதிர்த்து தன்னந்தனியாய் போராடிய அந்த தாய்மையின் பிரிவினையும் அவர்பால் சக பதிவர்கள் கொண்டிருந்த அக்கறையையும் தமிழ்மண வரலாற்றில் பதிவது அவசியமென படுகிறது. இதனை ஒரு வேண்டு கோளாய் ஏற்று அண்ணாருக்கு சக பதிவர்களின் அஞ்சலியினை பதியும் விதமாய் தமிழ்மண முகப்பில் ஒரு அறிவிப்பினையும் ஏற்பாடினையும் செய்யலாம்.

யோசியுங்கள் நண்பர்களே...

கின்னஸ் சாதனையை நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழன்...

Wednesday, August 27, 2008


சென்னையின் FM ரேடியோக்களில் BIG FM ம் ஒன்று...இதில் ஸ்பீட் தீனா என்கிற RJ ரொம்பவே பிரபலம். முதலில் சூரியன் FM ல் இருந்த மனிதர், தனது அறுவை ஜோக்குகளால் பிரபலம். ப்ளேட் தீனா என கலக்கிக் கொண்டிருந்தவர், சென்னைக்கு ரிலையன்ஸ் குழுமத்தில் BIG FM வந்த போது அதன் ஸ்டார் RJ ஆனார்.

இதற்கு முன்னரே ஒரு தடவை தொடர்ச்சியாய் இடைவெளியில்லாமல் இரண்டு மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளை வழங்கி சாதனை படைத்த இந்த இளைஞர் இப்போது கின்னஸ் சாதைனையை முறியடிக்கும் முயற்சியில் தற்போது ஏறத்தாழ தனது இலக்கினை நெருக்கிக் கொண்டிருக்கிறார். நாளை காலை இந்திய நேரப்படி ஐந்து மணிக்கு தனது சாதனையை நிறைவு செய்கிறார். இவரது இந்த சாதனையை வெப் கேமரா மூலம் லைவ் ஆக ஒளிபரப்புகிறார்கள். இந்த இனைப்பில் அதனை பார்வையிடலாம்.

சக தமிழன் ஒருவனின் அசாத்திய மன உறுதியை...வாழ்த்துவது நம் அனைவரின் கடமை..

வாழ்த்துகள் தீனா...

எழுதத்தான் நினைக்கிறேன்....

Tuesday, August 26, 2008

எழுதுவதை மறந்து விடக்கூடாதென்பதற்காய் இந்த பதிவு....சொல்லத்தான் நினைக்கிறேன் மாதிரி இது எழுதத்தான் நினைக்கிறேன்.

இலக்கின்றி எழுதுதல் என்பது இலகுவான ஒன்று, எவ்வித முன் தயாரிப்புமின்றி தோன்றுவதையெல்லாம் எழுதலாம்...அதாவது நல்ல நகைச்சுவையை கேட்ட மாத்திரத்தில் வாய்விட்டு சிரிப்பதைப்போல,.அத்தகைய செயலில் பாசாங்கிருக்காது அல்லவா?

எனது கடைசி பத்து பதிவுகளில் மூன்று விமர்சன பதிவுகள் அதுவும் என் சகபதிவர்களை சகட்டு மேனிக்கு காட்டு காட்டென காட்டிய பதிவுகள், அந்த கணத்தில் ஏற்பட்ட உணர்வுகளின் உந்துதலால் அப்படி எழுதவேண்டியதாயிற்று. இப்போது தோன்றுகிறது, அப்படி எழுதியதில் எனக்கு மகிழ்ச்சியில்லையென்று...யாரேனும் காயப்பட்டிருப்பார்களேயானால் அவர்களுக்காய் எனது வருத்தத்தினை இந்த இடத்தில் பதிந்து வைக்கிறேன்.

இப்போதைய எனது பிரச்சினை நேரம்தான்....எப்படித்தான் சமாளிக்கிறேன் எனபது இது வரை எனக்கு புரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், எதையும் திட்டமிடுவதில்லை, எல்லாம் தானாய் போகிறது, எத்தனை நாளைக்கு இப்படி சர்க்கஸ் வித்தைக்காரன் மாதிரி ஓடிக்கொண்டிருக்கப் போகிறேனோ தெரியவில்லை.

எங்காவது மலைவாசஸ்தலத்தில் ஆளில்லாத தனிமையான வீட்டில், தேனீர் கோப்பையின் துனையுடன், பள்ளத்தாக்கின் அழகை பருகியபடியே நிறைய எழுத ஆசையாயிருக்கிறது...வாய்க்குமா தெரியவில்லை.

இப்போதெல்லாம் தமிழ்வலைப்பதிவர்களில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது...ம்ம்ம்ம்ம், எத்தனை பேருக்கு மதுரா என்கிற பதிவரை தெரியும்?

என்னை பொறாமைபட வைத்த வார்த்தை பிரயோகங்கள், திருடிக்கொள்ள நினைத்த எழுத்து நடை, முயற்சித்தும் பார்த்தேன் முடியவில்லை, அருமையான எழுத்துக்கும் கருத்துக்கும் சொந்தக்காரி,....

சில அரைவேக்காட்டு பதிவர்களால் தனது தமிழ் பதிவினையே அழித்து விட்ட அருமையான தமிழ் பதிவர் அவர். இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே பதிவிடுகிறார்.

டெல்பின், காட்டாறு, உஷா ராமசந்திரன்...இவங்களை எங்காவது யாராவது பார்த்தா நான் கேட்டதா சொல்லுங்க.....விவேக் சொல்ற மாதிரி எனக்கு அவிங்களை தெரியும்....அவிங்களுக்கு என்னை தெரியாது..!

குசேலன் குப்புற விழுமென எதிர்பார்த்ததுதான்...ஆனால் இந்த இடறலில் தசாவதாரம் வெற்றிப்படம் என சொல்வதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையில் வர்த்தக ரீதியாய் தசாவதாரம் முதலுக்கு மோசமில்லைதான், குசேலனால் எட்டு லட்ச ரூபாய் வரை நஷ்டம்...முப்பது சதவிகிதம் திரும்ப தருவதாய் சொல்லியிருக்கிறார்கள்.....கையில் வந்தால்தான் உறுதி....பார்ப்போம். பேராசை பெருநட்டம் என்பது ரஜினி விசயத்தில் இரண்டாவது முறையாய் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

பரிசல் பழைய பாஃர்மில் எழுத ஆரம்பித்து விட்டார். சந்தோஷம்தான்...அவரின் சமீபத்தைய சோப்பு பதிவு அருமை.....ஹய்யடா, நம்மள மாதிரியே ஒரு ஆள்னு சந்தோசமாய்ட்டேன். ஆனால் நான் பரிசல் அளவுக்கெல்லாம் நீட்டி முழக்கியிருக்க மாட்டேன். ஒரே வரியில ஹைகமாண்ட்டை ஃப்ளாட் ஆக்கீருப்பேன். அந்த மேஜிக் வார்த்தை....”நீயல்லால் தெய்வமில்லை”....ஹி..ஹி...

அம்மணி இந்த பக்கம் வர்றதில்லைங்கிற தைரியத்துல என்னோட சீக்ரெட் வெப்பனை உங்க பார்வைக்கு வச்சிருக்கேன்.புத்திசாலிங்க யூஸ் பண்ணி சந்தோசமா இருங்க. வரும் காலங்களில் பரிசல் இதைக் காட்டிலும் அருமையான பல சோப்புகளை தயாரித்திட வாழ்த்துகிறேன்.

பரிசலின் எழுத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்...இதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது சமீபத்தைய பதிவுகள், நேயர் விருப்பம் மாதிரி அவரின் ரசிகர்களை குஷிப்படுத்த எழுதப்படுவதற்காகவே எனக்கு தோன்றுகிறது.இது சரியா, தவறா என்பதை அவரின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

எழுத நினைச்ச எல்லாத்தையும் இப்பவே எழுதீட்டா அடுத்த பதிவெழுத மேட்டருக்கு எங்க போவேன்....அதுனால இப்பதைக்கு இங்கன வுட்ரேன் ஜூட்....

பரிசல்காரனுக்கு ஒரு மனம் திறந்த மடல்....

Wednesday, August 13, 2008

அன்பின் மொக்கைச்சாமி !

இந்த பெயர் எனக்கு பிடித்திருக்கிறது....உங்களுக்கு ஆட்சேபனையிருந்தால் மன்னித்து விடுங்கள்.....

நேற்றைய எனது பதிவு எந்த வகையிலும் உங்களையோ உங்களின் எழுத்துப் பணியினையோ களங்கப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.சக பதிவன் என்கிற முறையில் உங்களின் எழுத்து மற்றும் எண்ண சுதந்திரம் எந்தவொரு மூன்றாவது சகபதிவரால் அறிவுரை என்கிற பெயரில் கே(ள்வி)லிக்குள்ளாக்கப்பட கூடாது என்கிற ஆத்திரத்தின் எதிரொலியே....

இங்கே பதிவெழுதுகிற யாரும் பால்மணம் மாறா பச்சைக்குழந்தைகளில்லை, எல்லோரும் தங்கள் எல்லைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்தவர்களே....சுய சிந்தனையுடன் எவ்வித புற அழுத்தமுமில்லாத படைப்பாளிகள் என்று கூட பெருமையாகக் சொல்லிக்கொள்ளலாம்.

என்னுடைய அனுபவத்தில் நிறைய பதிவர்கள் பதிவெழுதத் துவங்கிய பொழுதில் இருந்த வேகமும் உற்சாகமும் போகிற போக்கில் மங்கிப் போய் ஒரு கட்டத்தில் காணாமலே போய்விட்டார்கள்.இதற்கு நிறைய உதாரணஙகளைச் சொல்லமுடியும். அப்படியான ஒருவராக நீங்கள் ஆகிவிடும் ஆபத்தினை நான் இன்னமும் எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கும் பட்சத்தில், நீங்களும் என்னை அவ்வாறாகவே கருதும் சூழலில் உங்கள் நிறைகளை நான் சபையில் பெருமையாக பேசவேண்டும், அது நான் உங்களின் நட்புக்குச் செய்கிற மரியாதையாக இருக்கும். பரஸ்பரம் இருவருமே நெகிழ்ந்து போகிற உன்னதமான தருணமாயிருக்கும்.

அதே நேரத்தில் உங்களின் குறைகளை தனிமையில் உங்களுக்கு மட்டுமே உறைக்கிற மாதிரி இதை விட காட்டமாய், ஏன் முகத்திலறைந்தார் போல சொல்லுவேன்...சொல்லவேண்டும்...அதுதான் நட்பு. மாறாக உங்கள் குறையகளாக நான் கருதுகிறவைகளை சபையில் பகீங்கரமாய் எல்லார் முன்னாலும் போட்டுடைத்து அதனால் இனிமேல் நீ இப்படி நடந்து கொள் என புத்தி சொல்வது எந்தவகை நட்பின் இலக்கணம் என்பதை உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்....ஆனால் பெருந்தன்மையாய் அந்த அறிவுரையினை ஏற்றுக்கொண்ட பாங்கில் என் மதிப்பில் நிறையவே உயர்ந்துவிட்டீர்கள் மொக்கச்சாமி!

நாமனைவரும் தவறு செய்வது தவிர்க்கமுடியாதது....நம்மில் யாரும் புனிதரில்லை, இடறிவிழும் வாய்ப்புகள் எல்லோருக்கும் உண்டு. ஆனால் நட்பின் பெயரால் தனிமனிதனின் சுதந்திரமும், அவனது நிதர்சனங்களும், எல்லைகளும் பகீங்கரமாக பொதுவில் கிழித்து தொங்கவிடப்படுவதை நியாயப்படுத்த முடியாத ஆதங்கமே முந்தைய பதிவு. திரு.லதானந் அவர்கள் என்னுடைய நண்பராக இருந்திருக்கும் பட்சத்தில் அத்தகைய ஒரு பதிவிற்கு தேவையே இருந்திருக்காது....பரஸ்பரம் அறிமுகமில்லை.அவர் மீது எனக்கு வருத்தம்தானேயொழிய வேறொன்றுமில்லை.

அன்புடன்

-யட்சன்

இந்த கடிதத்திற்கு சம்பந்தமேயில்லாத குறிப்பு:

என்னில் அக்கறையுடன் ஆலோசனைகள் வழங்கிய கவி.முத்துலட்சுமி, இராம், சஞ்சய், லக்கிலுக், அய்யனார் போன்ற நண்பர்களுக்கு நன்றி. புபட்டியன் நிச்சயமாக நான் முற்பிறவியில் வவ்வால் இல்லை.

.

லதானந் செய்தது சரிதானே...!

Monday, August 11, 2008

லதானந் என்கிற பதிவர், பரிசல்காரன் என்கிற பதிவர் மீதிருக்கும் அதீத அக்கறையினால் அவரின் வலை மோகத்தினை கண்டித்து மனம் திறந்த மடல் ஒன்றினை பதிவாக இட்டிருக்கிறார். அந்த பதிவினை படித்த கணத்தில் பரிசல்காரனின் அறியாமை அகன்று அகக்கண் திறந்து உணர்வுவயப்பட்ட நிலையில் பதிவுலகை விட்டு போவதாக ஒரு ரெஸ்பான்ஸ் பதிவும் போட்டிருக்கிறார்.

தமிழ் டிவி சீரியல் வசனங்கள் பிச்சை வாங்குமளவிற்கு செண்ட்டிமெண்ட்டான வசனங்களுடன் பின்னூட்டங்கள்,பின்னூட்டங்களை படிக்கும் போது..லதானத் அவர்களின் மேன்மையான குணத்தினை நினைத்து நெக்குருகிப் போனேன். சக பதிவரின் மீதான அவரின் அக்கறை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.அவரின் பதிவினை படித்த பின்னர்தான் இங்கே வலைபதியும் முக்கால் வாசி பேருக்கு தாங்கள் வெட்டியாக பொழுதை கழித்துக் கொண்டிருப்பதே தெரிய வந்திருக்கிறது. இதற்காக நான் லதானந் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

சரி...இனி எனக்கு தோன்றிய சில அற்பமான எண்ணங்கள்......

லதானந் அவர்களின் பதிவின் மூலம் இருவரும் பதிவின் வழியாகவும், நேரிலும், தொலைபேசியிலும்,சாட்டிலும் பரஸ்பரம் ஸ்நேகமானவர்கள் என தெரிகிறது . இத்தனை புரிந்துணர்வுடன் செயல்படும் லதானந் அவர்கள், பரிசல்காரன் வழிமாறிப் போவதாய் உணர்ந்தவுடன், தொலைபேசியிலோ அல்லது சாட்டிலோ அல்லது நேரில் அழைத்தோ...தம்பி முதலில் குடும்பத்தை பார் அப்புறம் வலையுலகில் கும்மியடிக்கலாம் என சொல்லியிருக்கலாம்.

ஒரு வேளை அன்றைக்கு லதானந் அவர்கள் மௌனவிரதம் மேற்கொண்டிருந்திருக்கலாம், அல்லது பரிசல்காரன் பதிவெழுதுகிற அவசரத்தில் தனது அலைபேசியை சார்ஜ் செய்ய மறந்திருக்கலாம்.அதனால்தான் மின்னஞ்சல் வழியாக கூட அறிவுறுத்த மனமில்லாமல் அவசர அவசரமாய் பதிவெழுதியிருப்பார் என உறுதியாக நம்புகிறேன். இந்த தியாக திருப்பணியை கொச்சைப் படுத்தும் வகையில், திரு.லதானந் தனது பதிவு சூடான இடுகையில் வரவேண்டும்மென்றோ, அல்லது இப்படியாக ஒரு செண்ட்டிமெண்ட் ட்ரமா மூலம் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரபரப்பினை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டு அதற்காக பரிசல்காரனை பலி கொடுத்தார் என்று நீங்கள் நினைப்பீர்களானால் உங்களை திருத்த நான் தனியே பதிவெழுத வேண்டியிருக்கும்.


எது எப்படியோ லதானந் அவர்களின் அறிவுரையினால் பதிவுலகில் அதிகமாய் பதிவெழுதுபவர்கள் தங்களை சந்தேகத்துடன் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.முதல்கட்டமாய் பரிசல்காரன் என்கிற மொக்கைச்சாமி வெளியேறிவிட்டார்.மேலும் பல மொக்கைச்சாமிகள் தங்களுக்கு சூடும் சொரணையும் வ்ந்துவிட்டதாக வாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறார்கள்.இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதற்காக திரு.லதானந் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி....

குசேலனுக்கு பதிலா இதப்பார்க்கலாம்!

Sunday, August 3, 2008



ஆளாளுக்கு குசேலனையும், ரஜினையும் பிரிச்சி மேய்றதுக்கு பதிலா இந்த குத்தாட்டத்தை பார்த்து சந்தோஷப்படலாம். குசேலன் குப்பைன்னா...இது அதைவிட குப்பை. குசேலன் ஹிட்டுன்னா...இது மெஹா ஹிட்..

சமீபத்துல சோபனாவை பார்க்க நேர்ந்தது...அன்னில இருந்து ஷோபனா பத்தி ஒரு பதிவு போடனும்னு மண்டைக்குள்ளார ஓடீட்டு இருந்துச்சி...இன்னிக்கு இறக்கி வச்சாச்சி...நீங்களும் என்சாய் பண்ணுங்க !

மேற்படி பாட்டு போட்டதுக்கு பிராயசித்தமாய் ஒரு அருமையான ரீமிக்ஸ்....ஷோபனா, அமிதாப்...அநேகமாய் நிறைய பேர் இதை பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.



இதுதாண்டா ரீமிக்ஸ்...னு சொல்லவைக்கும் இசை,இசையமைப்பாளர்(?) பெயர் பாலி சாஹூ.

என்னுடைய கணிப்பில் பொன்னியின் செல்வனின் குந்தவைக்கு ஷோபனா பொருந்தியிருபார்....இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வீர்களோ தெரியவில்லை.