போலி டோண்டுவும் ஒரு புண்ணாக்கு பதிவும்

Thursday, July 24, 2008

போலி டோண்டு என அன்போடு(?) அழைக்கப்பட்ட திருவாளர். மூர்த்தி என்பவர் சென்னை சைபர்க்ரைம் போலீசாரின் வசமிருப்பதாகவும், அவருக்கெதிரான நடவடிக்கைகள் பற்றியும் பெரியவர் டோண்டு தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு பிடிக்காத அல்லது மாற்றுக்கருத்தாளர்களை எதிர்கொள்கிறேன் பேர்வழியென அவர் செய்த செயல்கள் யாவும் அருவெறுப்பானவை, தரம்தாழ்ந்தவை, தண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இப்போது அவர் முடக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியே...

இந்த பதிவின் நோக்கம் அவரின் வீழ்ச்சியை அறிவிக்கும் ஜெயபேரிகையோ அல்லது அதை தொடரும் கொண்டாட்டங்களோ இல்லை. வலைபதிவுகளில் நாலாண்டு காலத்திற்கு மேல் சுற்றி வருபவன் என்கிற முறையிலும், ஒரு சக பார்வையாளனாய் என்னுடைய சில எண்ணங்களை சொல்வதே இப்பதிவு....

திரு.மூர்த்தி என்பவர் தமிழ்வலையுலக செயல்பாட்டின் முன்னோடிகளில் ஒருவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது, முத்தமிழ்மன்றம் போன்ற குழுமங்களில் அவரின் பங்களிப்புகள் இருந்தது, இருக்கிறது. இத்தகைய மனிதரை போலி டோண்டுவாக மாற்றிய பெருமை, நம்முடைய மூத்த பதிவர் பெரியவர் டோண்டுவையே சாரும் என்பது நிஜத்திலும் நிஜம். இதை அவரும் மறுக்க மாட்டார், மறுக்கவும் முடியாது.

நம்முடைய மூத்த பதிவருக்கும் மூர்த்தியின் புதிய அவதாரம் தனது வலையுலக வளர்ச்சிக்கும், பரபரப்பிற்கும் தேவைபட்டதால்....அவரே மூர்த்திக்கு போலி டோண்டு என்கிற நாமகரணமும் செய்வித்து மூர்த்தியை கொம்பு சீவினார் .

திருவாளர் மூர்த்தியால், மிக மோசமாயும், கேவலமாயும் தாக்கப்பட்டவர் பெரியவர் டோண்டுவாகத்தானிருக்க முடியும். பாவம் அப்போதெல்லாம் அவருக்கு காவல்துறை அலுவலகம் எந்த திசையில் இருக்கிறதென தெரியாது போயிருக்கிறது. மூர்த்தியை தானே கண்டுபிடிக்கப் போவதாயும், அதற்கென யுக்தி, உத்தி என தன் சார்ந்த ஒரு குழுவினை உருவாக்கவும், அவர்களுக்கு பிதாமகனாய் செயல்பட்டு தனக்கு புகழ்தேடிக்கொண்டார் என்பதை அப்போதைய தமிழ் வலைப்பதிவின் பங்களிப்பாளார்கள் அனைவரும் அறிவர்.

தனக்கும் தான் சார்ந்தோருக்கும் ஏற்பட்ட இந்த பாதிப்புகளையும், அசிங்கங்களையும் ஏதோ தர்மயுத்தம் மாதிரியும், இவர் அதை காக்கப் புறப்பட்ட புரட்சியாளர் மாதிரியான பில்ட்டப்புகளினால், ஆத்திரத்தில் அறிவிழந்த மூர்த்தியும் பெரியவரின் பதிவுகளில் பின்னூட்டமிடும் சக பதிவர்களையும் வாசகர்களையும் குறிவைத்து வெறிநாய் போல விரட்டத்துவங்கினார்...இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது அப்பாவியான சக பெண் பதிவர்கள்தான்..... அதிலும் பிராமணர்கள் என தெரிந்தால் மூர்த்தியின் ஆபாசமும், அர்ச்சனையும் எல்லை மீறியது.

தனிமனிதனாய் சுற்றிக்கொண்டிருந்த மூர்த்தியை....குழுவாய் செயல்பட வைத்ததில் இந்த பெரியவருக்கு நிறையவே பங்குண்டு....எப்பொழுதெல்லாம் தன்னுடைய பதிவுகள் சுணங்குகிறதோ அப்போதெல்லாம் புதிய அஸ்திரம் ஒன்றை வெளிக்காட்டி....தனக்கும் போலி டோண்டுவுக்கும் விளம்பரம் தேடிக்கொண்டதில் இவருக்கு இனை யாருமில்லை.

அனானிகளை கேவலமாய் விமர்சித்துவந்த இந்த பெரியவர், டஜன் கணக்கில் போலி பதிவுகளை வைத்திருந்தார் என்பதும், கையும் களவுமாய் மாட்டி சந்தி சிரித்தபின்னர் இல்லாத குட்டிக்கரணம் போட்டது சரித்திரம். இவருடைய அடிப்பொடியொருவர், சக பெண் பதிவர் ஒருவரை பற்றி எழுதிய ஆபாசப்பதிவிட்டு, கையும் களவுமாய் மாட்டிக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த போது, தனது சிஷ்யருக்காய் இவர் அடித்த சப்பைக்கட்டுகளும், சல்ஜாப்புகளும் இப்போது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை காட்சிகள்.

இன்றைக்கு கூட மூர்த்தி முடக்கப்பட்டது, செந்தழல்ரவி, ஓசைசெல்லா போன்ற இளைய்வர்களால்தான் என்பதை மறந்து விடக்கூடாது.பாராட்டும் வாழ்த்துகளும் இந்த இளையவர்களுக்கே போய்ச்சேர வேண்டும். நம் பெரியவருக்கு மூர்த்தியை முடக்கும் எண்ணம் எக்காலத்திலும் இருந்ததில்லை....போலி டோண்டு இல்லாவிட்டால் தான் காணாமல் போய்விடுவோம் என்பது மாதிரியான நினைப்பில், தொடர்ச்சியாய் அதைச்செய்கிறேன்...இதைச்செய்கிறேன் என சவடால் விட்டுக்கொண்டே, மலிவான விளம்பரங்களுக்காய் மூர்த்தியின் திருவிளையாடல்களை ஊக்குவித்தார் என்பதுதான் உண்மை.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் அவசியம்தான்....ஆனால் குற்றவாளியை தொடர்ந்து குற்றம் செய்ய தூண்டியவரை என்ன செய்யலாம்.இப்போதைக்கு இவ்வளவுதான். இதற்கு மேல் எழுதினால் கோபத்தில் என்ன எழுதுவேன் என்று தெரியாது.(முந்தைய வரி எந்த பதிவிலிருந்தும் காப்பியடிக்கப்படவில்லை...நானே எழுதியதாக்கும் :-) )

மிக முக்கியமான அடிக்குறிப்பு :

1. பெரியவரின் திறமை மற்றும் தன்னம்பிக்கை மீது எனக்கு எப்போதும் அசாத்தியமான மரியாதை உண்டு.

2. திரு.மூர்த்தி, காலத்தின் கட்டாயத்தால் மட்டுமே தன்னுடைய பதிவுகளில் மன்னிப்பு கடிதமிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் திருந்திவிட்டதாக நான் நம்பவில்லை.

3.தனிமனித விமர்சனங்களுக்கும், தனிமனித தாக்குதல்களுக்குமான வித்தியாசங்களை பதிவர்கள் இந்த சூழலிலாவது உணர்தல் அவசியம்.

4. அனைவரும் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

உண்மை தமிழன் மன்னிச்சிருங்க !

Monday, July 21, 2008

நேற்று உங்கள் படைப்பான ‘புனிதப்போர்' என்கிற குறும்படத்தினை காண முடிந்தது. எண்ணங்களை எழுத்தில் வடிப்பதும், அதை காட்சிப்படுத்துவதும் வெவ்வேறான தளங்கள் என்கிற அடிப்படையை உணராமல் போனதுதான் உங்களின் இந்த முயற்சியின் முதல் தோல்வியாக இருக்கும்.

அரதப்பழசான ஒரு கரு, அதை விட அமெச்சூரான ஒரு தலைப்பு...பக்கம் பக்கமாய் போதனைகள்,எரிச்சலூட்டும் கை தட்டல்கள், தேமேவென இந்த பக்கமும் அந்த பக்கமும் நகரும் கேமரா....இதையெல்லாம் விட கொடுமையான எடிட்டிங்...

என்ன கொடுமையிது சரவணா!

ஒரு தேர்ந்த விளம்பரபட இயக்குனன்...நாலைந்து ஃப்ரேமில்...இரண்டு நிமிடத்துக்குள் இன்னமும் அழுத்தமாய் பதிவு செய்துவிடக்கூடிய ஒரு சங்கதியை, நீங்கள் பன்னிரெண்டு நிமிடங்களுக்கு நீட்டி பார்வையாளனின் எரிச்சலை கட்டிக்கொண்டதுதான் மிச்சம்.

முயற்சிகள் தவறலாம்...ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது, உங்களின் அடுத்த முயற்சிக்கு வாழ்த்துகள்.

கணக்கு பண்ண வர்றீங்களா?

Sunday, July 20, 2008

என்ன பண்றது இபப்டி தலைப்பு போட்டாத்தான் நம்ம ஏரியா பக்கம் ஆளுக எட்டிப் பாக்குறாங்க...ஹி..ஹி...ம்ம்

இனி மேட்டருக்கு வருவோம்...வருமான வரி கணக்குகளை இந்த மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்தாக வேண்டும். ஆளாளுக்கு ஆடிட்டர் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் நேரம். சம்பளகாரர்களுக்கு கவலையில்லை...அவரவர் நிறுவனத்திலேயே பிடித்தம் செய்து விடுகின்றனர்.

எதுக்கு இத்தனை பில்டப்....

வேற ஒன்னுமில்லை மக்களே...இன்னிக்கு வலை மேஞ்சிட்டு இருந்தப்ப...இந்த இனைய தளம் கண்ணில் சிக்கிச்சு...சரி பதிவுக்கு ஒரு மேட்டர் தேறிச்சேன்னு பதிஞ்சிட்டேன்.

தேவையானவங்க பயன்படுத்திக்குங்க....

NITHYA'S TAX CALCULATOR

தமிழச்சியின் பதிவில் பின்னூட்டம் போடமுடியாத கொடுமை!

Thursday, July 17, 2008

தமிழச்சியின் பதிவுகளில், தமிழச்சியின் கிறுக்கல்(!) என்கிற பதிவும் ஒன்று. கொஞ்ச நாளா அங்கிட்டு இங்கிட்டு சுத்திட்டு இருந்ததால அவரோட அந்த பதிவு பக்கம் போகலை. இன்னிக்கு திடீர்னு தோணிச்சு, சரி போய்ட்டு வருவமேன்னு போனேன். ஒரு கவிதை(?), சாரி...கிறுக்கல், அதை படியுங்கோ முதலில்....

பிடித்ததும்,பிடிக்காததும்...

உனக்கு பிடிக்காதது...
எனக்கு பிடித்திருந்தது...!
எனக்கு பிடித்தது...
உனக்கு பிடிக்காதிருந்தது...!
ஆனாலும் உனக்கு...
என்னை பிடித்திருந்தது...!
எனக்கு உன்னை பிடித்திருந்தது...
இன்றோ உனக்கும் எனக்கும்...
நம்மை பிடித்திருக்கிறதா...?


மொதத்தடவை படிக்கறப்ப ஒன்னும் வெள்ங்காது...இரண்டு மூனு தடவை படிச்சவுடனே இம்புட்டுதானான்னு தோணும்....எனக்கும் தோணிச்சி...சரி நாமளும் நம்ம பங்குக்கு நாலு வரி கிறுக்கீட்டு போவமேன்னு பின்னூட்டமா இப்படி கிறுக்கினேன்.

உனக்கு
பிடித்ததெல்லாம்
எனக்கு
பிடித்திருக்கவேண்டியதில்லை
ஆனாலும்
எனக்கு பிடிக்காததையும் ரசிக்கிறேன்...
உன்னை எனக்கு பிடித்திருப்பதால்....

(என்ன கொடுமையிது! ஏன் நான் இப்படியல்லாம் எழுதறேன்...ஹி..ஹி..ம்ம்ம்)


இப்படி டைப்பீட்டு பதிவு செய்யப்போனா...உன்னோட பின்னூட்டமெல்லாம் இங்க எடுபடாது மவனேன்னு ப்ளாக்கர் சொல்லீருச்சு, ஆஹா!, நாமளே ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவைன்னு இங்கன வர்றோம், நம்ம பின்னூட்டத்துக்க் அனுமதியில்லையான்னு ஆத்திரப்பட்டு திரும்ப பார்த்தா...அவங்க பங்காளிக மட்டுந்தான் அங்கன பின்னூட்டம் போடனுமாம். நானும் ஒரு பழய பங்காளிதான்னு அவுகளுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல...அதான் பதிவா போட்டுட்டேன்.யாராச்சும் எங்கனயாச்சும் தமிழச்சிய பார்த்தா இந்த பதிவு மேட்டர அவுக காதுல போடுங்கப்பேய்....

நாங்களும் ரவுடிதான்....!

Wednesday, July 16, 2008

தயாநிதி யாருக்கு ஓட்டுப் போடுவார்?

Tuesday, July 15, 2008

இருபத்தியிரண்டாம் தேதி !

நாடாளுமன்றத்தில் தனது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருக்கிறார் பிரதமர், தற்போதைய நிலவரத்தின் படி எப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் பத்திலிருந்து, பதினைந்து வாக்குகள் தேவைப்படுகிற பரிதாப நிலையில்தான் தற்போதய மத்திய அரசு இருக்கிறது.

தற்போதைய நிலையில் அரசுக்கு உறுதியான் ஆதரவினை தெரிவித்துள்ளவர்கள் பட்டியலின் படி 257 பேர் இருக்கின்றனர், இதன் படி இன்னமும் பதினைந்து பேரின் ஆதரவினை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.

Congress 153
Samajwadi Party 39
Rashtriya Janata Dal 24
Dravida Munnetra Kazhagam 16
Nationalist Congress Party 11
Pattali Makkal Katchi 6
Lok Janshakti Party 4
Marumalarchi Dravida
Munnetra Kazhagam
2
Indian Union Muslim League 1
Republican Party of India 1

TOTAL 257 MP


இதேவகையில், அரசுக்கு எதிராக....

Bharatiya Janata Party 130
Communist Party of India-Marxist 43
Bahujan Samaj Party 17
Shiv Sena 12
Biju Janata Dal 11
Communist Party of India 10
Janata Dal - United 8
Shiromani Akali Dal 8
Telugu Desam Party 5
All India Forward Bloc 3
Rashtriya Lok Dal 3
Telangana Rashtra Samithi 3
Revolutionary Socialist Party 3
Marumalarchi Dravida Munnetra Kazhagam 2
Assom Gana Parishad 2
National Conference 2
Kerala Congress 1
Nagaland People's Front 1
Janata Dal-Secular 1
Trinamool Congress 1

TOTAL 266 MPs


ஆக இவர்களுக்கு இன்னமும் ஆறு உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் எதிர்கட்சிகள் அரசினை கவிழ்த்துவிட முடியும். தற்போதைய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கும் பட்சத்தில் ஆதாயம் பெறப்போகும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அதனால் அவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இரண்டு புறமும் குதிரை பேரம் நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. காங்கிரஸ் தரப்பில் ஒரு உறுப்பினருக்கு இருபத்தியைந்து கோடி வரை கொடுக்க தயாராய் இருப்பதாய் கம்யூனிஸ்ட்டுகள் குற்றம் சாட்டியியிருப்பதை கவனிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி இதைவிட அதிகம் கொடுத்து தங்களுக்கு தேவையான ஆறு உறுப்பினர்களை விலைபேசும் வாய்புகளை மறுப்பதற்கில்லை.

தற்போதைய நிலையில் ஆறு உதிரிகளுக்குத்தான் கொண்டாட்டம், மத்திய அரசினால் அவமானப்படுத்தப்பட்டதாய் கருதும் சிபுச்சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஐந்து உறுப்பினர்களின் நிலைப்பாடுமே நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவினை தீர்மானிக்கும் வாய்ப்பிருக்கிறது.

துவக்கத்தில் இருந்தே சிவசேனா மற்றும் திரினமுல் காங்கிரஸ் கட்சிகள், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தினை எதிர்க்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எதிர்வரும் ஓட்டெடுப்பில் இவர்கள் கலந்து கொள்ளாமல் நடுநிலைவகிக்கும் வாய்புகளையும் மறுப்பத்ற்கில்லை.அவ்வாறான சூழல் ஆளும் கட்சியின் வெற்றிவாய்புகள் எளிதாகும்.

இப்போது பதிவின் தலைப்புக்கு வருவோம்....

திமுக தலைமையினால் தொடர்ச்சியாய் அவமானப்படுத்தப் பட்டுவரும், மாறன் சகோதரர்கள் இந்த வாக்கெடுப்பினை முன்வைத்து கட்சித்தலைமையுடன் சமரசம் பேச முனைவார்கள். ஒருவேளை தங்கள் முயற்சிகள் தோற்கும் பட்சத்தில் தயாநிதி மாறன் வாக்கெடுப்பினை புறக்கணிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன்.அத்தகைய ஒரு நடவடிக்கை தயாநிதி மாறனை எதிர்முகாமுக்கு கொண்டு்செல்லும் முதல் தப்படி(Setp)யாக அமையும்.பணபலமிக்க மாறன் சகோதரர்களை அரவனைக்க விஜயகாந்த் முதல் அம்மா வரை தயாராகவே இருப்பார்கள்.

கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாய் கருதி, தயாநிதி மாறன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால், அது தனக்கு சாதகமான நிலைப்பாடாய் அமையும் என தயாநிதி கணக்குப் போடுவார்.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக அல்லது அதிமுக நிறைய இடங்களை பிடிக்கும் பட்சத்தில், அடுத்து அமையவிருக்கும் மத்திய அரசிடம் பேரம் பேசும் தரகர் வேலைக்காவது இவரை தங்கள் அருகாமையில் வைத்துக் கொள்ள இந்த கட்சிகள் நினைக்கலாம்.

திமுக தலைமை மாறனுக்கு கருனை காட்டுமா அல்லது எதிர்முகாமுக்கு அவரை விரட்டியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(முதல் அரசியல் கட்டுரை...அத்தனை கோர்வையாக வரவில்லை என நினைக்கிறேன்...நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...பின்னூட்டமிடுங்கள்.ஆதரவினை பொறுத்து வ்ரும் நாளில் அரசியலை பிரித்து மேய்வோம்)

கண்கள் இரண்டால்...

Monday, July 14, 2008



சுப்ரமணியபுரம்...சமீபத்தைய தமிழ் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கும் படம். இன்னொரு மதுரைக்காரன் ஜெயித்ததற்கான தற்பெருமை, தொடர்ச்சியாய் மதுரையின் கதைகள் தமிழர்களின் உணர்வுகளின் நீள அகலங்களில் ஊடுறுவுவதை காண்பதில் ஒரு பெருமிதம்..இதையெல்லாம் சொல்வதற்காய் இந்த பதிவு இல்லை.

கண்கள் இரண்டால்...இந்த பாடலும், அதில் அடுக்கப்படும் சம்பவங்களும், அச்சுஅசலாய் பிரதியெடுக்கப்பட்ட என்பதுகளின் சூழலும்...இது எனக்குள் கிளறிய நினைவுகளை சேகரித்து வைக்கவே இந்த பதிவு....

இளையராஜாவை நினைவுபடுத்தும் இசைக்கோர்வை, அன்றைய அலைகள் ஓய்வதில்லை பாடல்களையொத்த வரிகள்...

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா...


அது எனக்கு பள்ளிக்கூட வயது, பெல்பாட்டம் பேண்ட் போடவேண்டுமென வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததெல்லாம் நினைவுக்கு வ்ருகிறது.ஒரு தீபாவளிக்கு கீழே ஜிப் வைத்த பெல்பாட்டம் கிடைத்தபோது அடைந்த களங்கமில்லாத சந்தோஷத்தை சமீபத்தில் எப்பொழுதும் நான் பெறவில்லை என்றே நினைக்கிறேன்....

இந்த பட ஹீரோவைப்போல, பரட்டைத்தலையும், பத்துநாள் தாடியுமாய் நான் பார்த்த பல அண்ணன்மார்கள் இப்போது அய்ம்பதுகளில்....தேய்ந்து போன கார் டயர்களையே நினைவுபடுத்துகின்றனர்.

குறுகுறுவென திருட்டுப்பார்வையும், மெலிதான கோபத்துடன், ”நாங்களும் இருக்கோமாக்கும்” என்பதான முறைப்பும்...பொழச்சிப்போடாங்கிற மாதிரியான மெலிதான முறுவலும்....இன்ன பிற கவிதையான விழிமொழிகளுடன் வீதிக்கொரு கதாநாயகி இருந்தாள்...இன்னமும் இருக்கத்தான் செய்கிறாள்.வாழ்க்கையின் வேகத்தில் நான்தான் அதையெல்லாம் மறந்துவிட்டேனோ என்பது மாதிரியான உணர்வுகளை தந்த பாடல் இது.

இந்த கதாநாயகன்...எப்படி அச்சுஅசலாய் நம்மை மாதிரியே பல்லைகாட்டுகிறான் என்பதும், இன்னொரு ஆச்சர்யம். அந்த சமயத்தில் எனக்கு தெரிந்த பயல்கள் பலரும், ஏன் என்னையும் சேர்த்துதான்...விழிகளின் அங்கீகாரம் கிடைத்த கணத்தில் பற்பசை விளம்பரக்காரனைப் போல இளித்திருக்கிறோம்...அதை அந்த கதாநாயகிகளும் ரசிக்கத்தான் செய்தார்கள்.

மதுரையின் மருத்துவக்கல்லூரி வளாகம், அவுட்போஸ்ட் பஸ்ஸாடாப், மிஷன் ஹாஸ்பிடல் பஸ்ஸ்டாப் எல்லாம் இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது...மூன்று ஹீரோயின்களை சமாளித்ததை இப்போது நினைத்தால் ஆச்சர்யமான ஆச்சர்யம்.

இன்றைக்கு எல்லாம் தொலைத்து,மறந்து ஏதோ சமீபத்தில் காலிசெய்யப்பட்ட வீட்டிற்குள் நிலவும் வெறுமையான உணர்வுடன் இந்த பதிவினை முடிக்கிறேன்