அப்பாவின் மகன் !

Saturday, June 20, 2009

இன்றைக்கு அப்பாக்களின் தினமாம், காலையில் கண்விழித்த போது கிடைத்த எச்சில் முத்தங்களும், வாழ்த்து அட்டைகளும் தந்த...... மகிழ்ச்சியை உள்வாங்குவதற்குள் அப்பாவின் நினைவு...

மதுரையில் அப்பா !....

கடந்த சில தினங்களாய் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை, பெரிதாய் கவலைப்பட ஏதுமில்லையென்றாலும் இந்த முறை நிறையவே கவலைப்படுகிறேன்.....எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

எல்லோரைப்போலவும் நானும் அம்மா பையனாகவே இருந்ததினால் அம்மாவை தாண்டிய அல்லது அம்மாவின் ஊடாகவே அப்பாவை பார்த்திருக்கிறேனோவென்கிற நெருடல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு.மற்றவர்களை போன்றவரல்ல என் அப்பா...அவர் பிறந்த பிரசவத்தில் எனது பாட்டியார் தவறிப்போக, அம்மா இல்லாத பிள்ளையாய் பிறந்து, தனது ஆறாவது வயதில் தந்தையையும் இழந்து பெற்றோரின் அரவனைப்போ, அன்போ இல்லாது தன் அண்ணன்களின் பராமரிப்பில் அண்ணிகளின் கொடுங்கோலாட்சியில் தனது இளமையைத் தொலைத்த பரிதாபமான வரலாறுடையவர்.

அவரின் இளமைக்காலத்து அவலக் கதைகள் பலவும்தான் என்னை மிகப்பெரிய உயரங்களில் சாமன்யனாகவும், மிகத் தாழ்வான தருணங்களில் அதீத கம்பீரத்துடன் நிதானித்து நிற்கும் மன உறுதியை தந்திருக்கிறது என்றால் மிகையில்லை. அத்தனை இடைஞ்சல்கள், அவமதிப்புகள் மத்தியில் இரண்டு டிகிரிகள் முடித்து தனக்கென ஒரு வாழ்க்கையையும், உயரங்களையும் அமைத்துக் கொண்டவர். படிக்க வைத்த செலவு என்கிற வகையில் பூர்வீக சொத்துக்கள் அண்ணன்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மௌனமாய் கையெழுத்துப் போட்டுக்கொடுதுவிட்டு வந்தவர்.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து அவர் எங்களோடு பெரிதாய் நெருங்கியிருந்ததாய் நினைவில்லை. அவரின் அறையில் எப்போதும் எதாகிலும் படித்துக் கொண்டிருப்பார்.அம்மாவின் மூலமே அப்பாவை அனுகமுடியும். அன்பை வெளிப்படையாக காட்டத் தெரியாத அப்பாவாகவே அவர் இருந்தார். ஆனால் எங்களை எதிர்கொள்ளூம் போது அப்பா கேட்கும் ஒரே வார்த்தை ”சாப்ட்டியா” என்பதாகவே இருக்கும். ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் தன் அண்ணிகளால் அவமதிக்கப்பட்ட அல்லது அனுமதியில்லாத அந்த சிறுவனின் ஏக்கத்தின் எதிரொலியான வார்த்தைகளாகவே அதை பின்னாளில் நான் புரிந்து கொண்டேன். இப்போதும் எனக்கு நெருக்கமானவர்களை பார்த்தவுடன் நான் தன்னிச்சையாக கேட்கும் முதல் கேள்வி “சாப்ட்டியா” என்பதாகத்தான் இருக்கும்.

அம்மா உண்மையில் அப்பாவை ஒரு குழந்தையை கவனிப்பதை போல கவனித்துக் கொண்டார். எங்களைவிட தங்கை அப்பாவுக்கு நெருக்கமாயிருந்தாள். அப்பாவின் மீதான ஏகபோக உரிமை தங்கைக்கிருந்தது. அப்பாவும் அதை அனுமதித்தார். அதன் மூலமாய் கிடைத்த சலுகைகள், பரிசுகள், கூடுதல் கவனிப்புகள் இதெல்லாம் பொறாமையாகி எங்களை அம்மாவின் அடிபொடிகளாக்கியது எனலாம்.

கல்லூரி நாட்களுக்குப் பின்னரே அப்பாவுடன் நெருங்க முடிந்தது. காலையில் அவருடன் வாக்கிங் போக ஆரம்பித்த பின்னரே அப்பாவின் ஃப்ளாஷ்பேக்குகளை எனக்கு சொல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மூத்தவன் என்பதாலோ என்னவோ என்னுடன் நெருக்கமாயிருக்க முயற்சித்தாரென நினைக்க ஆரம்பித்தேன். அடுத்து என்ன செய்வது, எதிர்கால திட்டங்கள் அல்லது அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் என் மீது திணிக்காமல் கோரிக்கையாக வைத்தார். இப்போது நான் அப்பாவின் மிகப்பெரிய ரசிகனாயிருந்தேன்.

ஒரு நாள் இரவு, "சாப்ட்டுட்டு என் ரூமுக்கு வா!" என்றார்......இந்த மாதிரி அவர் ரூமுக்கு அழைத்து எங்களிடம் பேசுவதில்லை. பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டே அவர் பேசிய காட்சி இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.

“உனக்கு கல்யாணம் பண்ணீடலாம்னு நானும் அம்மாவும் முடிவு பண்ணீருக்கோம்....என்ன சொல்றே !”

அதுக்குள்ள எதுக்கு, இன்னும் ஒரு வருசம் போகட்டும்....இது நான்

அம்மா உனக்கு பொண்னு பார்க்க ஆரம்பிச்சிருக்கா...எனக்கு அதுல இஷ்டமில்லை, நீ என்ன நினைக்கறேங்கறதுதான் எனக்கு முக்கியம்....

யாரையாவது மனசுல வச்சிருக்கியா? அப்படி உனக்கு புடிச்சிருந்தா சொல்லு...அது யாரா இருந்தாலும் எனக்கு சரிதான், அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...அவசரமில்லை நல்லா யோசிச்சு சொல்லு...... உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.....

ஒரு மாதம் முன்னால் கேட்டிருந்தால் படக்கென அந்த பெண்ணை கை காட்டியிருப்பேன்....அப்போதுதான் ஒரு ச்ச்ச்சின்ன ஈகோ பிரச்சினையில் கோவத்தில் இருந்ததலால்....நீங்க பார்த்து என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதமென விட்டேத்தியாய் பதில் சொன்னேன். ஆனால் அந்த நிமிஷத்தில் மேசை விளக்கின் வெளிச்சத்தில் அப்பாவின் முகத்தில் தெரிந்த புன்னகை என் வாழ்வின் மகிழ்வான தருணங்களில் ஒன்று.....

தங்கையின் திருமணத்தின் போது, நிறையவே செய்யவேண்டுமென ஆசைப்பட்டார், நானும் தம்பியும் தடையேதும் சொல்லவில்லை...அப்படியே செஞ்சிரலாம்னு சொல்ல, அம்மாவோ இப்பவே எல்லாத்தயும் செய்யனுமாவென தடைபோட, அந்த புள்ளையை கைக்குள்ளயே வச்சி வளர்த்துட்டேன், போற இடத்துல அது எதுக்காகவும் யாரையும் எதிர்பார்க்க கூடாது என அவர் கண்கலங்கியதை பார்த்த அம்மா, அவர் நினைத்ததை காட்டிலும் மேலும் அதிகமாய் செய்த போது அவர்களின் பரஸ்பர புரிதல்களின் ஆழம் உணர்ந்தோம்.

புகழ்ந்துகொண்டேயிருப்பது இந்த பதிவின் நோக்கமில்லை, நெகிழ்வான தருணஙக்ளை பதிந்து வைக்குமொறு முயற்சியே, .

நாங்கள் சிறுவர்களாயிருந்த போது அப்பா ஒரு ச்செயின் ஸ்மோக்கர் ஒரு நாளைக்கு 6-7 பாக்கெட்டுகளை காலிசெய்வார். அவரின் அறையே புகைமண்டலமாயிருக்கும். சிகரெட் மணம் இன்றைக்கும் எனக்கு அலர்ஜியாகிப் போனதில் அப்பாவிற்கு பங்குண்டு. எனது நட்புவட்டமனைத்தும் வளையம் வளையமாய் ஊதிக்கொண்டிருந்த போதும் நான் அதில் ஆர்வமில்லாமல் இருந்தது அப்பாவின் இந்த பழக்கம்தான். சிறுவயதில் அவரை நெருங்க முடியாமல் போனதற்கும் இதுதான் காரணமாயிருந்திருக்க முடியும். பின்னாளில் அம்மாவிற்கு ஒரு இதய அறுவை சிகிச்சையின் போது சிகரெட் பழக்கத்தை விடுவதாக வேண்டிக் கொண்டதனால் எல்லோரும் ஆச்சர்யபடும் வகையில் சுத்தமாய் அந்த பழக்கத்தை விட்டுவிட்டார்.

இப்படி நிறையவே எழுதலாம்தான்.....ம்ம்ம்ம்

இந்த வாரம் டிக்கெட் போடனும்...அப்பாவை பார்க்கனும்.

நன்றி நண்பர்களே...!

Wednesday, June 17, 2009

என்னுடைய இரண்டு இனைய இனைப்புகளும் எதிர்பாராதவிதமாய் செயலிழந்து விட கடந்த இரண்டு வாரங்களாய் எனது பதிவுத் தொல்லையிலிருந்து தப்பித்திருந்தீர்கள் தமிழ்மணம் என்னை தள்ளி விட்ட பின்னர் இனி நிறைய தொடர்ந்து எழுதிட வேண்டுமென நினைத்திருந்தேன்....ம்ம்ம்

முந்தைய பதிவில் எனக்கு ஆதரவாய் நின்ற அன்புள்ளங்களுக்கு நன்றி....லக்கிக்கு ஒரு ஸ்பெசல் நன்றி. நான் இதுவ்ரை அவரை நேரில் சந்தித்ததில்லை. அவ்ர் பதிவுகளில் சென்று கும்மியடித்தவனுமில்லை. அவரின் அன்பு அந்த கணத்தில் என்னை நெகிழச்செய்தது என்றால் மிகையில்லை. தேங்க்ஸ் லக்கி !

நாலைந்து பதிவுகள் எழுதி வைத்திருக்கிறேன்....திருத்தம் செய்து பதிப்பிக்க வேண்டும். ஆனால் எழுதி வைத்து பதிவிடுகிற பதிவுகளை விட ச்ச்சுட ச்ச்ச்சுட எழுதுகிற பதிவுகள்தான் என்வரையில் நன்றாக வருகிறதாய் ஒரு எண்ணம். நேற்று இனையம் வந்த சந்தோசத்தில் யு ட்யூப் பக்கமாய் சுத்திக் கொண்டிருந்த போது இந்த பாடல் சிக்கியது.....



கொஞ்சம் கிளுகிளுப்பான பாடல்தான்....ரம்யா க்ருஷ்ணனை கையை காலை ஆட்டி உட்ற்பயிற்சி செய்திருக்கிறார்!, நமக்கு அது முக்கியமில்லை (ஹி..ஹி..நெசமாத்தான் சொல்றேன்!).ரம்யாவின் பின்னனியில் அவர் காட்டியிருக்கும் வித்தையை கவனித்துப் பாருங்கள். தேர்ந்த ஒரு ஓவியனின் ஆயில் பெயிண்ட்டிங் போல ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார். இன்றைக்கு பெரும்பாலான ஒளிப்பதிவாளர்கள் செயற்கையான லைட்டிங்கில் காட்டும் அற்புதங்களை பாலுமகேந்திரா இயற்கையான வெளிச்சத்தில் படம் பிடித்திருக்கிறாரென நினைக்கிறேன்.மங்கலான அந்த எஃபெக்ட் கூட நன்றாகத்தானிருக்கிறது.

பாலுமகேந்திரா என்கிற கலைஞர் அவர் வாழும் காலத்தில் சரியான முறையில் கௌரவிக்கப் படவில்லை என்பது என் கருத்து....மற்றபடி இந்த பாடலில் ரம்யாவுக்கு பதிலாக பானுப்பிரியா மட்டும் ஈரம் சொட்ட சொட்ட ஆடியிருந்தால்....ஹெ...ஹெ...எழுதும் போதே மூடாவுதுப்பா....ஹி..ஹி...கன்னா பின்னான்னு கற்பனை பண்ணாம கண்ணை மூடீட்டு பாட்டைமட்டும் கேட்டுப் பாருங்க....விரகதாபம் வழிந்தோடும்...இளையராசா தி க்ரேட் !

”பத்தியகறி” , “வழுதுணங்காய்” இது எதை குறிக்கிறது என்பதை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்....இல்லாங்காட்டி அடுத்த பதிவுல சொல்றேன்...


தமிழ்மணத்துக்கு விடைகொடுப்போம்....

Monday, June 1, 2009

உடன்பிறப்பே....

கடந்த சில நாட்களாய் உன் அருமை கண்மணியாம் யட்சனின் பதிவினை தமிழ்மணதிரட்டியில் இனைக்க இயலாததன் சதி இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தமிழமண திரட்டியார் தங்களின் அளவுகோலுக்கு அருகே வராத பதிவுகளை தூக்கியெறிய போகிறோமென அறிவித்த போதுகூட நாம் அப்பாவியாய் அவர்களின் பதிவுக்குச் சென்று சென்று நம் பதிவினை இனைக்க முடியாத சோகத்தை அங்கே முறையிட்டிருந்ததை நீ அறிவாய்.

இதன் பொருட்டு நம் அடைப்பலகையையும் இரண்டொரு முறை மாற்றியதும், அதனால் நீ பட்ட சிரமமும் நாளைய வரலாறு கூறும் செய்திகளானதை நான் எப்படி மறப்பேன். என்னுடைய நுட்ப அறிவினை நீ சந்தேகிக்கிறாயோவென என்னி அதன் பொருட்டு சோதனை பதிவாய் ஃப்ரான்ஸ் தேசத்து அதிபரின் அழகிய மனையாளின் திருவுருவப் படத்தினை உனக்கு காட்டிட என்னி இனையமெங்கும் அலைந்து திரிந்து, உருண்டு புரண்டு உலகே வியக்குமந்த பெருமாட்டியின் அழகினை உனக்கு கொண்டு வந்து சேர்த்ததாய் அகமகிழ்ந்திருந்தேன்.

அதன் பின்னரும் இனைக்க இயலாமல் போகவே இது நம் மாற்றாரின் சதியாக இருக்குமோவென எண்ணி ஐயம் தெளிய தமிழ்மணத்தாருக்கு மின்னஞ்சலொன்று வரைந்தேன். அந்த மின்னஞ்சலை உன் பார்வைக்கு வைக்கிறேன்....படித்துப்பார் அதில் ஏதும் பிழையிருக்கிறதாவென.....

அன்புடையீர்,

எனது தமிழ் வலைபதிவான http://yatchan.blogspot.com கடந்த ஒரு வருடமாய் தமிழ்மண திரட்டியினால் திரட்டப்படுகிறது. கடந்த சில நாட்களாய் எனது பதிவில் இருக்கும் தமிழ்மணபட்டியினை காணக்கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக பதிவினை தமிழ்மணத்தில் இனைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனையடுத்து வேறு பல அடைபலகைகளை மாற்றியும் அதில் தமிழ்மண பட்டி தொடர்பான குறியீடுகளை இனைத்த போதிலும் இந்த சிக்கல் நீடிக்கிறது.

தவறு என் பக்கதிலிருக்கிறதா அல்லது தமிழ்மண திரட்டி எனது பதிவினை திரட்டுவதில் இருந்து விலக்கி வைத்திருக்கிறதா என்பது குறித்தான தங்களின் விளக்கம் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்....

அன்பன்

சரவணக்குமார் (யட்சன்)

இதற்கான பதிலும் உடனடியாக வந்தது....

யட்சன்,

மன்னிக்கவும். அண்மைய மாற்றங்களின், முடிவுகளின் படி, உங்கள் பதிவும் தமிழ்மணத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

-செல்வராஜ்.




தமிழ்மணத்திலிருந்து விலக்கியிருக்கிறார்களாம், இந்த ஒரு வரியினை முன்னமே எழுதியிருந்தால் உன் அருமை கண்மணியாம் யட்சன் அடைப் பலகைகளோடு போராடியிருக்க வேண்டாம். அழகிய பெருமாட்டியின் படம் தேடி அலைந்திருக்க வேண்டாம். நமது கடிதத்தில் நமது பதிவினை விலக்கியிருக்கும் பட்சத்தில் அதற்கான காரண்த்தை கேட்டிருந்தோம்....அது நமது பண்பு ஆனால் அவர்களின் பதில் நறுக்குத் தெறித்தார் போல விரோதம் கொண்டவனின் மடலாய் இருப்பதை பார்த்து நீ எத்தனை வேதனைப்படுவாய் என்பதை என்னால் உணரமுடிகிறது.

இத்தகைய ஒரு பதில் எனக்கு எத்தனை கோபத்தை வரவழைத்திருக்கும் என்பதை நீ உணர்ந்திருபபர்ய், ஆனால் நாம் பண்பாடு தவறாதவர்கள், அடிப்படை நாகரீகம் தெரிந்தவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுன்டு என நம்புபவர்கள். அதனால் நான் அவர்களுக்கு இப்படியொரு பதில் மடல் அனுப்பியிருக்கிறேன்.

அன்புடையீர்,
தங்களின் உடனடி பதிலுக்கு நன்றி....
எனது பதிவு எதனடிப்படையில் தங்கள் திரட்டியினால் விலக்கிவைக்கபடுகிறது என்பதை விளக்கிடும் பெருந்தன்மை உங்களுக்கு இல்லாவிடினும், அதை தெரிந்து கொள்ளும் ஆவலுமெனக்கு இப்போது எழவில்லை.
நான் தங்களின் மேலான அளவுகோலுக்குள் உட்படாத நிலையில் தொடர்ந்து எனது மற்ற பதிவுகளை உங்கள் திரட்டியில் இனைத்திருப்பது உங்களின் மேன்மைமிகு செயல்பாட்டிற்கு இடைஞ்சலாயிருக்குமென கருதுகிறேன்.
எனவே பங்குச்சந்தை தொடர்பான எனது நுட்ப பதிவினை உடனடியாக தங்கள் திரட்டியிலிருந்து நீக்கி விடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். எனது பங்கு வணிகம் தொடர்பான வலைப்பதிவின் முகவரி http://panguvaniham.wordpress.com
எனவே தயை கூர்ந்து எனது வேண்டுகோளினை ஏற்று எனது பங்கு வணிகம் பதிவினை தங்கள் திரட்டியிலிருந்து விலக்கி அதை எனக்கு உறுதிப்படுத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
கடந்த நான்காண்டுகளாய் எனது பதிவினை தங்கள் திரட்டியில் இனைத்திருந்தமைக்கு நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
மு.சரவணக்குமார் (யட்சன்)

இப்போது நீ எத்தகை உணர்ச்சிப் பிழம்பாயிருபபாய் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாம் கடந்து வந்த பாதையில் எவரையும் இழிவாய் பழித்து திட்டியதில்லை, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு எவர் வீட்டு சுவற்றிலும் கிறுக்கியதில்லை. ஆபாசமாய் அர்ச்சித்ததில்லை....நமக்கு சரியென பட்டதை சனநாயக முறையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். இதை உணராத தமிழ்மணத்தார்....நமது வளர்ச்சியினை முடக்கும் விதத்தில் இத்தகைய செயலினை செய்திருப்பர் என நம்புகிறேன்.

நமது மடலுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் நமது பதிவுகளை இனி அவர்கள் திரட்டுவதில்லை என்கிற உறுதிமொழியினை எதிர்பார்க்கிறேன். நமது பயனுள்ள பணி தொடருமென்பது உனக்கும் எனக்கும் தெரிந்தால் போதும்.

இறுதியாக ஒரு வேண்டுகோளினை உன் பாதம் பணிந்து கேட்கிறேன், தட்டமாட்டாயென்கிற உரிமையில் கேட்கிறேன்....இந்த பாதக செயலை என்னி மனம் வருந்தி, கொதித்தெழுந்து மாற்றாரை அவதூறு செய்திடும் வகையில் எந்த வொரு காரியத்தையும் செய்யமாட்டேன் என்கிற உறுதிமொழியினை நீ எனக்கு தந்திடல் வேண்டும்.

இனி அவர்கள் நம் வழியில் இல்லை, நாம் நமது வழியில் தொடர்கிறோம்.....அவர்களுக்கு வாழ்த்தி விடைகொடுப்போம்.

வாழ்க தமிழ்....வளர்க இங்கிலீஷ்.....

-யட்சன்